உள்ளூர் செய்திகள்

மே 3ல் நீட் தேர்வு 11 மையங்களில் 4,741 பேர் தேர்வெழுத தயார்

நாமக்கல்: மருத்துவ படிப்பிற்கான, 'நீட்' தகுதி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்', இன்று வெளியிடப்படுகிறது. வரும் மே, 3ல், நடக்கும், 'நீட்' தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில், 4,741 பேர் எழுதுகின்றனர். இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தகுதி தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு, வரும், மே 3ல் நாடு முழுவதும் நடக்கிறது.அதில், இந்தியா முழுவதும், 22 லட்சம் மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, இன்று காலை, 10:00 மணிக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் என்.டி.ஏ., இணையதளத்தில், 'லாக் இன்' செய்து, தங்களது, 'ஹால் டிக்கெட்'டை பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.நாமக்கல் மாவட்டத்தில், வரும், மே, 3ல், 11 மையங்களில், 'நீட்' தேர்வு நடக்கிறது. இந்தாண்டு பிளஸ் 2 முடித்தவர்கள், கடந்த ஆண்டுகளில், 'நீட்' தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் இடம் பெற முடியாதவர்கள் என, மொத்தம், 4,741 பேர் தேர்வை எழுதுகின்றனர்.அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், 'நீட்' தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. 2025ல், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம், 6,007 மாணவ, மாணவியர், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து, 'ஹால் டிக்கெட்' பெற்றனர். அதே ஆண்டு, மே 3ல், 14 மையங்களில் தேர்வு நடந்தது. அதில், 81 பேர் பங்கேற்கவில்லை. மொத்தம், 5,926 பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில், இந்தாண்டு, 'நீட்' தேர்வுக்கு, 4,741 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் எண்ணிக்கை, 1,266 பேர் குறைந்துள்ளது. தமிழக அளவில், நாமக்கல் மாவட்டத்தில், அதிக மாணவர்கள், 'நீட்' தேர்வில் பங்கேற்பர். அதேபோல், நாமக்கல்லில் படிக்கும் மாணவர்கள் அதிக மருத்துவ இடங்களில் சேர்க்கை பெறுவர். இந்நிலையில், நடப்பாண்டு நாமக்கல் மாவட்டத்தில், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்