குரூப்-4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்வு
அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரித் தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர் ஆகிய பணிகளில், காலியாக உள்ள, 5,566 பணியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த, 15ம் தேதி, மாலை, 4:00 மணி நிலவரப்படி, 16.13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அன்றிரவு, 11:59 வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்க, கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி, கூடுதலாக, 1.37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 17.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வாணைய, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா கூறுகையில், "தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாங்கள், தினமும், கலெக்டர்களுடன் பேசுகிறோம்; அவர்களும் பேசுகின்றனர். தேர்வு நெருக்கத்தின் போது, "வீடியோ கான்பரன்சிங்" மூலமும் பேசி, தேவையான ஏற்பாடுகளைச் செய்வோம்" என்றார். தேர்வுக்கு, இன்னும், 24 நாட்கள் தான் உள்ளன .