மே 5ல் நீட் தேர்வு
நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லுாரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2024 -25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில், மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பதிவு நேற்று முன்தினம் முதல் துவங்கியது. மார்ச் 9ம் தேதி வரை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.நீட் தேர்வுக்கான கட்டணம் பொது பிரிவினருக்கு 1,700 ரூபாய்; பிற்படுத்தப்பட்டோருக்கு 1,600 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், ஜி.எஸ்.டி., மற்றும் சேவை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.இதற்கிடையே, ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தகுதி தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன், 14ம் தேதி வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு,https://nta.ac.in என்ற இணையதளம்; 011- 40759000 தொலைபேசி எண் மற்றும் neet@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.