97 சதவீதம் மாணவர் இடைநிற்றல் தடுப்பு
திருப்பூர்: “மாவட்டத்தில், 97 சதவீத இடைநிற்றல் தடுக்கப்பட்டுள்ளது” என, கலெக்டர் மனிஷ்நாரணவரே கூறினார்.பள்ளி கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சார்பில் 'சிறுவாணி இலக்கிய திருவிழா - 2026', திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. ஆர்.டி.ஓ., சிவபிரகாஷ் வரவேற்றார். மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சிக்கு ஒரு நுாலகம் கலெக்டர் மனிஷ்நாரணவரே தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் ஒரு நுாலகம் ஏற்படுத்துவதற்கான முயற்சி நடந்து வருகிறது. தற்போதைக்கு, 170 இடங்களில் நுாலகம் உள்ளது.நுாலகம் இல்லாத கிராமங்களில் பள்ளி நுாலகங்களை மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ள, புத்தகங்களை எடுத்துக்கொள்ள, வாசகராக வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.புத்தகம் படியுங்கள் கல்வி ஏற்படுத்தித் தரும் வாய்ப்பை வேறெதுவும் நமக்கு முழுமையாக தராது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் புத்தகம் படிப்பதை ஒரு பழக்கமாக வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நுாலக போட்டியில் வென்ற ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், 28 புத்தகங்களை படித்து முடித்துள்ளதாக கூறினார்; மகிழ்ச்சியாக இருந்தது.ஆசிரியர்கள் சிரத்தை எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களும் நம் ஊரில் இருக்கிறார்கள். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் இடைநிற்றலை தவிர்க்க, சிரத்தை எடுத்து பணியாற்ற வேண்டியுள்ளது. ஆசிரியர்கள், தன்னார்வலர்களின் தொடர் முயற்சியால், மாவட்டத்தில், 97 சதவீத இடைநிற்றல் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.எழுத்தாளர்கள் கோவை சதாசிவம், தேவிபாரதி ஆகியோர் பேசினர். மாவட்ட நுாலக அலுவலர் ராஜன் நன்றி கூறினார். பள்ளி தாளாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்றும் நிகழ்ச்சி நடக்கிறது.