10ம் வகுப்பில் ஹிந்தி பாடத்துக்கு கிரேடு ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்
பெங்களூரு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மூன்றாவது மொழி தேர்வின் மதிப்பெண்ணுக்கு பதிலாக 'கிரேடு' வழங்கப்படும் என்ற அரசின் முன்மொழிவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மூன்று மொழித் தேர்வுகளை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். இதில், மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது வேறு மொழியை மாணவர்களே தேர்வு செய்து படிக்கலாம். பெரும்பாலான மாணவர்கள், ஹிந்தி படித்து வருகின்றனர்.இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, 'வரும் கல்யாண்டு முதல், மூன்றாவது மொழித்தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. மூன்றாவது மொழித் தேர்வில் மதிப்பெண்ணுக்கு பதிலாக, 'கிரேடு' வழங்கப்படும்' என்றார்.இந்த உத்தரவை எதிர்த்து, சந்தனா, வெங்கடேஷ் ஆகியோர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், கல்வி துறை அமைச்சர் மதுபங்காரப்பா, பள்ளி கல்வி துறை கமிஷனர், செயலர் பெயரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து கொண்டிருந்த மார்ச் 31ம் தேதி இந்த அறிக்கை வெளியிடப்பட்டதால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக இது வரை எந்த அதிகாரபூர்வ அரசாணையோ அல்லது அறிவிப்போ வெளியாகவில்லை. அமைச்சரின் இந்த முடிவுக்கு பொது மக்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்து உள்ளது.அமைச்சரின் இந்த முடிவு, அரசியலமைப்பின் 14வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவ உரிமையை மீறுவதாகும். இது அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உள்ள கல்வி உரிமையை பாதிப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்தையும் சீர்குலைக்கிறது.அரசின் அதிகாரபூர்வ உத்தரவு இல்லாமல், ஒரு கொள்கையை செயல்படுத்த முடியாது. எனவே, அரசின் முடிவை ரத்து செய்ய நீதிமன்றம் தலையைிட வேண்டும். அமைச்சரின் சர்ச்சைக்குரிய அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.