10ம் வகுப்பு தனித் தேர்வு: புதிய விதிமுறையால் மாணவர்கள் பாதிப்பு
பத்தாம் வகுப்பு, தனித்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, கடந்த ஜன., 24 முதல் நேற்று (பிப்.,4) வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இம்முறை, ஆன்-லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்து, அதன் நகல்களை முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள தேர்வுத் துறை அலுவலரிடம் கொடுக்க வேண்டும். இதன்படி, டூடோரியல், மற்றும் வீட்டில் இருந்த படியே, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 தனித் தேர்வர்களின் விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பட்டன. இதனால் அந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விண்ணப்பம் ஏற்கப்படாத மாணவர் முகுந்தன் கூறியதாவது: நான், பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கான விண்ணப்பத்தை அலுவலரிடம் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்து விட்டார். காரணம் கேட்டால், சமச்சீர் பாடத்திட்டத்தின் படி, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அறிவியல் பாடத்தில் செய்முறை (பிராக்டிக்கல்) தேர்வு உள்ளது. இதற்காக, தனித்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, ஆண்டுதோறும், ஜூன் 1 முதல் 15 வரை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் மனு செய்தவர்களுக்கு, ஏதாவது ஒரு பள்ளியில் செய்முறை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும். தலைமை ஆசிரியர் அதற்கான சான்றிதழ் வழங்குவார். அந்த சான்றிதழை வழங்கினால் தான், விண்ணப்பத்தை ஏற்க வேண்டும், என தேர்வு துறை உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறார்கள். இந்த புதிய விதிமுறை குறித்து எங்களுக்கு தெரியாது. இதனால், என் போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் உள்ளனர். மாணவர்கள் அனைவருக்கும் புதிய உத்தரவு குறித்து நன்கு தெரியும் வகையில், அவர்களின் நலன் கருதி செய்முறை தேர்வு பயிற்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும், என்றார். தேர்வுத்துறை அதிகாரி கூறியதாவது: தற்போது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வு உண்டு. தனித்தேர்வர்களுக்கு, இதற்கான பயிற்சி சான்றிதழ் இருந்தால் தான், அனைத்து பாடத்திற்கும் தேர்வு எழுத முடியும். இதுகுறித்து பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, 3 முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தெரியாமல், செய்முறை பயிற்சி முடிக்காத மாணவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பு வழங்குவது குறித்து, தேர்வுத் துறை தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும், என்றார்.