10ம் வகுப்பு மாணவர் விவரம்: ஜனவரி 23 வரை காலக்கெடு
தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்" என, தேர்வுத்துறை உத்தரவிட்டது. "மின்வெட்டு பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது" என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜனவரி 23ம் தேதி வரை நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.