உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு தேர்வெழுத அனுமதி மறுப்பு!

தேனி: பத்தாம் வகுப்பில், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் நோக்கில், பள்ளி நிர்வாகம் தங்களை பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என மாணவர்கள், தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தேனி மாவட்டம், கூடலுாரில் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 10ம் வகுப்பு படித்த, பிரகாஷ், பிரதீப், மகேஷ், மணி, சுமித்ரா, பிரீத்தா, சுவாதி, திவ்யா உட்பட, 10 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கவில்லை:இவர்கள் நேற்று பெற்றோருடன், தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். அதில், தங்களை பொதுத் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை; இதனால் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். பெற்றோர் கூறுகையில், பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை காரணம் காட்டி, 10ம் வகுப்பில், சுமாராக படிக்கும் எங்கள் பிள்ளைகளை மட்டும் பள்ளி நிர்வாகம் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் தமிழ் தேர்வு எழுத முடியவில்லை. அனைத்து தேர்வுகளையும் எழுத அனுமதிக்க வேண்டும் என்றனர். மாற்றுச்சான்றிதழ் பள்ளி நிர்வாகம் தரப்பில், கடந்தாண்டு ஜூலை, 12ல் இம்மாணவர்கள், 10 பேருக்கும் அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் அனைவரும், டுட்டோரியல் வகுப்பில் சேர்ந்து படித்துள்ளனர். மற்ற விவரங்கள் ஏதும் தெரியாது என்றனர். முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டுமென்றால், முதலில் மாணவர்கள் அறிவியல் செய்முறை தேர்வு எழுத வேண்டும். இதுபோன்ற தேர்வுகளை அவர்கள் எழுதவில்லை. பள்ளி வருகை பதிவேட்டிலும் பெயர் இல்லை. அனைவரும் தனித்தேர்வராக தேர்வு எழுத, ஹால் டிக்கெட் பெற்றுள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்