உள்ளூர் செய்திகள்

150 ஆண்டு பழமை வாய்ந்த நீலகிரி நூலகம்!

ஆங்கிலேயர் ஆட்சியின் போது நீலகிரி கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன், ஊட்டியின் இயற்கையை ரசித்து, வரலாற்று சிறப்பு மிக்க பல மாற்றங்களை ஏற்படுத்தினார். இவர் உருவாக்கிய வரலாற்றுச் சின்னங்கள், இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் ஒன்று நீலகிரி நூலகம். ராணுவ அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக, 1858ம் ஆண்டு ரூ.30 ஆயிரம் மதிப்பில் இந்த நூலகம் அமைக்கப்பட்டது. நூலகத்தில், பல்வேறு தகவல்கள் அடங்கிய 40 ஆயிரம் அரிய புத்தகங்கள் வைக்கப்பட்டன. நூலக வளாகத்திலேயே, வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களின் காட்சியம், ஆங்கிலேயர்கள் நடனமாட ஒரு கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டன. ஆங்கிலேயர் தவிர, வேறு யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்திய சுதந்திரத்துக்கு பின், நூலகத்துக்கு புதிய கமிட்டி அமைக்கப்பட்டு, உறுப்பினர்களும் உருவாக்கப்பட்டு, எவ்வித பிரச்னையுமின்றி சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போதுள்ள 436 உறுப்பினர்களின் மாத சந்தா மூலம் நூலகம் பராமரிக்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த நீலகிரி நூலகம், 150வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கான விழாவை, பிப்ரவரி முதல் வாரத்தில் கொண்டாட, கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான கூட்டம் சமீபத்தில் நடந்தது. விழாவுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், புக்கர் விருது பெற்ற சமூக சேவகர் அருந்ததி ராய் ஆகியோரை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நூலக தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் கூறியதாவது:நூலகத்தின் 150வது ஆண்டை கொண்டாட, ஆர்வலர்கள் சிலரிடமிருந்து நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம், 40 ஆயிரம் புத்தகங்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விழாவுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், புக்கர் விருது பெற்ற சமூக சேவகர் அருந்ததி ராய் ஆகியோரை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, இரண்டு நாட்கள் புத்தக கண்காட்சி, சிறந்த கலை நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கிருஷ்ணராஜ் கூறினார். ‘ஒரிஜினல் பிரின்ட்’டில் கிரேக்க நூலும் கைவசம்! நீலகிரி நூலகத்தில் 40 ஆயிரம் புத்தகங்களில், பல புத்தகங்கள் ஆங்கிலேயர் காலத்தில், இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்ட ‘ஒரிஜினல்’ புத்தகங்கள். இவற்றில், 1585ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட, கிரேக்க மொழியில் அமைந்த, ‘ரிலிஜன் ஹிஸ்டரி’ என்ற புத்தகம்  மிகவும் அரிதானது; இது கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்