17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
சென்னை: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, காஞ்சிபுரம், ஏனாத்துாரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய, நிர்வாக இடைக்கால வேந்தர் கோமதி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மெட்ராஸ் இ.என்.டி., ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் தலைமை வகித்தார்.வரவேற்புரை ஆற்றிய நிர்வாக வேந்தர் ஜெயந்தி, இக்கல்வி நிறுவனத்தின் சீர்மிகு பயணம் பற்றி குறிப்பிட்டதுடன், தேசிய கல்விக் கொள்கைகளோடு ஒன்றியுள்ள இந்நிறுவனத்தின் கல்வி கொள்கைகள் பற்றியும், உயர்தர கல்வி வழங்குவதில் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு பற்றியும் எடுத்துரைத்தார்.துணைவேந்தர் நீலகண்டன், இந்நிறுவனத்தின் அங்கீகாரங்கள், பாடத்திட்ட மேம்பாடுகள், ஆசிரியர் மேம்பாட்டிற்காகவும் மாணவர் நலனிற்காகவும் எடுக்கப்படும் முனைவுகள் உள்ளிட்ட முக்கிய சாதனைகளின் ஆண்டறிக்கையை வழங்கினார்.விழாவில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் என, 1,158 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தவிர, மகப்பேறு மருத்துவ நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவர் உஷாவுக்கும், மருத்துவர் நிமல் ராகவனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.