2 மாணவருக்கு 2 ஆசிரியர்; அரசுப்பள்ளியில் ஆச்சர்யம்
ஈரோடு: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் மல்லியம்மன் துருவம் வனகிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. தற்போது பள்ளியில் மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பில் தலா ஒரு மாணவர் என, இரண்டு பேர் மட்டுமே படிக்கின்றனர். தமிழ்செல்வி, சரத் அருள்மாறன் என்ற இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிக்கூடம் செல்ல, செங்குத்தான மலையில் ஏழு கி.மீ., அடர்ந்த வனப்பகுதியில் செல்லவேண்டும். இதனால், ஆசிரியர்கள் பெரும்பாலான நாட்கள் வருவதில்லை. இதன் காரணமாக, பள்ளிக்கு வரும், இரண்டு மாணவர்களுக்கும் பாடம் சொல்லித் தர ஆசிரியர் இல்லை. ஈரோடு மாவட்ட நிர்வாகம் இதற்கு ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும் என்று, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.