டி.ஆர்.பி., வெளியிட்ட உதவி பேராசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி ஏராளம்
மதுரை: 'ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்ட உதவி பேராசிரியர்கள் தேர்வு பட்டியலில் குளறுபடிகள் உள்ளது,' என, தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.மதுரையில் சங்க மாநிலத் தலைவர் தங்கராஜ் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள 188 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த டிசம்பரில் 2708 பணியிடங்களுக்கு மட்டும் 48 பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு டி.ஆர்.பி., தேர்வு நடத்தியது. 42 ஆயிரம் பேர் எழுதினர்.அதனடிப்படையில் வெளியிட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்ற விவரங்களில் பல குளறுபடிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, சிலருக்கு பணி அனுபவங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை கடந்த டிச., 27ல் டி.ஆர்.பி., வெளியிட்டது. அதில் ஒருவருக்கு 'எக்ஸ்பீரியன்ஸ்' என்ற இடத்தில் 11 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நபருக்கு நேர்காணல் முடிந்து வெளியிடப்பட்ட பட்டியலில் 13 மதிப்பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2 மதிப்பெண் ஏன் கூடுதலாக வழங்கப்பட்டது என கேள்வி எழுந்துள்ளது.உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக அரசாணையில் 'பகுதிநேர முனைவர் பட்டம் செல்லாது' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 'பகுதிநேர முனைவர் பட்டமும் ரெகுலர் பட்டம் ஆகும்' என ஏற்கனவே யு.ஜி.சி., விளக்கம் அளித்துள்ளது.அந்த அரசாணையில் 'மொழிபெயர்ப்பு குளறுபடி காரணமாக தவறான அர்த்தம் கொள்ளும் வகையில் பகுதிநேர முனைவர் பட்டம் செல்லாது' என இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இது குறித்து டி.ஆர்.பி.,யோ கல்லுாரிக் கல்வி இயக்குநர் அலுவலகமோ விளக்கம் அளிக்கவில்லை.பணி அனுபவச்சான்று சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி உதவி பேராசிரியர் எழுத்துத் தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்திய 700க்கும் மேற்பட்டோருக்கு 'ஹால் டிக்கெட்' வெளியிடப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியவில்லை.இது போன்ற குளறுபடிகளை நீக்கியும், 2708 பணியிடங்களுடன் கூடுதலாக 1292 பணியிடங்களையும் சேர்த்து 'கவுரவ விரிவுரையாளருக்கு மட்டும் பணி அனுபவம் மதிப்பெண்கள் 15 என வழங்க வேண்டும்' என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றியும் அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.