திராவிட வினாக்களால் தமிழுக்கு வந்த சோதனை; டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை
மதுரை: தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வில், பிரதான பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தேர்வர்கள், திராவிடம் சார்ந்த கேள்விகள் இடம் பெற்ற தமிழ் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வேதனையில் உள்ளனர். இதனால் அவர்கள் தமிழ் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வலியுறுத்தினர்.மாநிலம் முழுவதும் அக்.12ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வை டி.ஆர்.பி., நடத்தியது. 1500 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதினர்.முதன் முறையாக தமிழ்த் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்த் தேர்வில் 20 மதிப்பெண் பெற்றால் தான் முதன்மை பாடப்பிரிவு விடைத்தாள் மதிப்பிடப்படும் என்றே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வினாக்கள் மிகக் கடினமாக இருந்தன என தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர்.தற்போது 'கீ ஆன்சர்' வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதன்மை பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் பலர், தமிழ்த் தேர்வில் 20 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்றுள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக தயாராகி முதன்மை பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றும் ஆசிரியர் பணி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழ்த் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 20 என்பதை 15 ஆக குறைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்வர்கள் மனு அனுப்பி வருகின்றனர்.தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: முதன் முறையாக தமிழ்த் தகுதி தேர்வு நடத்தப்பட்டதால் வினாத்தாள் அமைப்பு விவரம் தெரியவில்லை. வழக்கமாக தமிழ் இலக்கணம், உரைநடை, அகர வரிசை, மொழியாக்கம் பகுதி வினாக்கள் இடம் பெறும்.ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியெல்லாம் பத்தாம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக 'கலைஞர் என்னும் சிறப்பு பெயர் மு.கருணாநிதிக்கு எந்த விழாவில் வழங்கப்பட்டது' என்ற கேள்விகளை எல்லாம் தமிழில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. போட்டித் தேர்வுகளில் இவ்வகை வினாக்கள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. முன்கூட்டியே தெரிந்திருந்தால் அதற்கும் தயாராகியிருப்போம்.எனவே தமிழைத் தகுதித் தேர்வாக முதன்முறையாக எழுதியதை அடிப்படையாக கொண்டு முதன்மை பாடத்தில் 80 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்ற தேர்வர்களுக்கு, தமிழ்த் தேர்வு தகுதி மதிப்பெண்ணை 15 ஆக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.