உள்ளூர் செய்திகள்

400க்கும் அதிகமான மருந்துகள் தரமற்றவை; கட்டுப்பாடு துறை ஆய்வில் கண்டுபிடிப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும், 400க்கும் அதிகமான மருந்துகள் தரமற்றவை என்பது, மருந்துகள் கட்டுப்பாடுத் துறை நடத்திய ஆய்வக பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.பல்லாரியின் அரசு மருத்துவமனையில், குழந்தை பிரசவித்த பெண்கள் அடுத்தடுத்து இறந்தனர். இதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தரமற்ற ஐவி குளுக்கோஸ் அளிக்கப்பட்டதே, பெண்களின் இறப்புக்கு காரணம் என்பது தெரிந்தது.குளுக்கோஸ் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பியது. அதிலும் தரமற்ற குளுக்கோஸ் என்பது உறுதியானது. மேற்கு வங்கம் வினியோகித்த மருந்துகளுக்கு, கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. நிறுவனம் மீது புகாரும் பதிவாகியுள்ளது.மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரத்தை தெரிந்து கொள்ளும் நோக்கில், வெவ்வேறு மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்துக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பினர். இவற்றில் 400க்கும் மேற்பட்ட மருந்துகள் தரமற்றவை என்பது உறுதியானது.மருந்துகள் கட்டுப்பாடு துறை அதிகாரிகள் கூறியதாவது:மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருந்துகளை சப்ளை செய்யும் முன்பு, ஆய்வகங்களில் சோதனை நடத்தி, தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். சில நிறுவனங்கள் சப்ளை செய்த மருந்துகள் தரமானதாக இல்லாதது, ஆய்வக பரிசோதனையில் தெரிந்தது.மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய, ஆய்வகங்களுக்கு மருந்துகளின் மாதிரிகள் அனுப்பப்படுகின்றன. தரமற்ற மருந்துகள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.மாநிலத்தில் 37,000க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் செயல்படுகின்றன. தனியார் மருந்து கடைகளை அவ்வப்போது சோதனை நடத்துகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், 24 மருந்து கடைகள் உரிமம் இல்லாமல், விதிமீறலாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்