உள்ளூர் செய்திகள்

9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவியர் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

நாமக்கல்: ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும், பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில், அரசு பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவியருக்கு, ஆண்டுக்கு, 4,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற, ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் வங்கியில், தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி, அவற்றை ஆதார் எண்னுடன் இணைத்திருக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை, தமது வருமான சான்று மற்றும் ஜாதிச்சான்று நகல்களுடன், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவியரின் விபரங்களை ஈ.எம்.ஐ.எஸ்., (எஜூகேசனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தை நேரிலும், 04286 -280193 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்