மாநில உதவியுடன் அகழாய்வு மத்திய தொல்லியல் துறை திட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மாநில பல்கலைகள் மற்றும் தொல்லியல் துறைகளுடன் இணைந்து, நாடு முழுதும் அகழாய்வு செய்ய, மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தொல்லியல் துறை, 34 வட்ட அலுவலகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு தொல்லியல் கண்காணிப்பாளரின் கீழ் இயங்குகிறது. இவற்றில், ஆலய பாதுகாப்பு, கல்வெட்டியல், வேதியியல் பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பு, அகழாய்வு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. அவற்றில், அகழாய்வுப் பிரிவுதான் வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடங்களை கண்டறிந்து, அகழாய்வுகளை செய்கிறது.அந்த வகையில், இந்திய வரலாற்றுக்கு வலு சேர்க்கும் வாய்மொழி கதைகள், புராண, இதிகாச கதைகளின் களங்கள், ஆற்றுப்படுகைகள், மலைகள், சமவெளிகள் உள்ளிட்ட இடங்களில், அந்தந்த மாநில தொல்லியல் துறை மற்றும் பல்கலை வல்லுனர்களின் உதவியுடன் அகழாய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையினர் கூறியதாவது:
மத்திய தொல்லியல் துறை, புதிதாக தக்காண பீடபூமியின் முக்கிய தொல்லியல் இடங்களையும், ஒடிஷா, மஹாராஷ்டிரா, தமிழக கடல் பகுதிகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால், மத்திய அகழாய்வு பிரிவில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், மாநில பல்கலை மற்றும் தொல்லியல் துறையின் உதவியை நாட உள்ளது. விரைவில் இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். -- நமது நிருபர் --