உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 78,000 தில்லுமுல்லு வர்த்தக கட்டடங்களுக்கு வரி உயர்வு! அழுத்தத்தால் தப்பிய 2.32 லட்சம் குடியிருப்புகள்

78,000 தில்லுமுல்லு வர்த்தக கட்டடங்களுக்கு வரி உயர்வு! அழுத்தத்தால் தப்பிய 2.32 லட்சம் குடியிருப்புகள்

சென்னையில், பரப்பளவை குறைத்து காட்டி தில்லுமுல்லு செய்து வந்த 78,000 வணிக கட்டடங்களை மறுமதிப்பீடு செய்து, கூடுதல் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 3.10 லட்சம் கட்டடங்கள் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு உள்ள நிலையில், பல்வேறு அழுத்தங்களால், 2.32 லட்சம் குடியிருப்பு கட்டடங்களுக்கு கூடுதல் வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும் வரி வருவாயில், சொத்து வரி பிரதானமாக உள்ளது. ஆண்டுக்கு, 1,800 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. நிலுவை வரி போன்றவை வசூலிக்கப்பட்டால், ஆண்டுக்கு, 2,300 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். இந்த வரி வருவாயில் இருந்து, சாலைகள் சீரமைப்பு, கொசு மருந்து அடித்தல், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை கணக்கீடு செய்ய, புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது. 'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு கட்டடங்களின் பரப்பளவு கணக்கிடப்பட்டது.இதில், 3,10,139 கட்டடங்களின் சொத்து வரியில் மாறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் கட்டட பரப்பளவை குறைத்து காட்டி, சொத்து வரியை குறைவாக செலுத்துவதும் கண்டறியப்பட்டது. அந்த கட்டடங்களின் பரப்பை மறு மதிப்பீடு செய்து, முறையான சொத்து வரியை வசூலிக்க, மாநகராட்சி முடிவு செய்தது.ஏற்கனவே மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் வாயிலாக, 30,899 கட்டடங்கள் மறு அளவீடு செய்யப்பட்டன. மீதமுள்ள, 2,79,240 கட்டடங்களை மறு அளவீடு செய்ய, பிரைம் மெரிடீயன் சர்வேஸ் நிறுவனம், அருள் நம்பி இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ், அரசு அசோசைட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன், 2023ல் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்நிறுவனங்களுக்கு, மண்டலம் வாரியாக மறு அளவீடு செய்ய வேண்டிய கட்டடங்கள் பிரித்து ஒதுக்கப்பட்டன. இந்த பணிகளுக்காக அந்நிறுவனங்களுக்கு, ஐந்து கோடி ரூபாயை மாநகராட்சி வழங்கியது. மறு மதிப்பீட்டின் வாயிலாக மாநகராட்சிக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக வருவாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.பணிகள் பெருமளவு முடிந்த நிலையில், தற்போது, 20,932 கட்டடங்களை மட்டுமே, மறு அளவீடு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், 'மறு மதிப்பீட்டின்படி, வணிக கட்டடங்களுக்கு மட்டுமே சொத்து வரியை உயர்த்திக் கொள்ளலாம். குடியிருப்பு கட்டடங்களுக்கு வேண்டாம்' என, மாநகராட்சி சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது.இந்த திடீர் உத்தரவால், மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பாதிக்கப்படுவதுடன், மறுமதிப்பீட்டிற்கு செலவிட்ட தொகையும் வீணாகி உள்ளது.மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: சொத்து வரியில் மாறுபாடு இருந்த கட்டடங்களை அளவிடும் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் மறு அளவீட்டின்படி, சொத்து வரி நிர்ணயம் செய்யப்படும். தற்போது, 78,000 வணிக கட்டடங்களுக்கு மட்டுமே சொத்து வரி உயர்த்தப்படும்.மீதமுள்ளவை குடியிருப்பு கட்டடங்களாக இருப்பதால், அங்கு மறுமதிப்பீட்டின்படி சொத்து வரி உயர்த்த வேண்டாம் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, மறுமதிப்பீட்டில் இனி, வணிக கட்டடங்களுக்கு மட்டுமே சொத்து வரி உயர்த்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சலுகையில் யாருக்கு சாதகம்?

நேர்மையாளர்கள் அதிருப்தி சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாய்களில், சொத்து வரி முக்கியமானது. ஆனால், பல்வேறு வர்த்தக கட்டடங்கள், குடியிருப்புகள் அளவை குறைத்து காட்டி சொத்து வரி செலுத்துவதில் தில்லுமுல்லு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து கட்டடங்களையும் மறுமதிப்பீடு செய்து, சொத்து வரி வசூலை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்தது. மறுமதிப்பீடு செய்யும் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக, அந்நிறுவனங்களுக்கு ஐந்து கோடி ரூபாயை மாநகராட்சி வழங்கியது. சென்னையில் மொத்தம் 13 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டடங்கள் உள்ளன. மறுமதிப்பீட்டில், மொத்தம் 3.10 லட்சத்திற்கும் அதிகமான கட்டடங்களின், அளவை குறைத்து காட்டி, வரி செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டின் படி, இந்த கட்டடங்களுக்கு சொத்து வரி அதிகரித்து வசூல் செய்ய முடியும் என்பதால், மாநகராட்சிக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பணிகள் பெருமளவு முடிந்த நிலையில், தற்போது, 20,932 கட்டடங்களை மட்டுமே, மறு அளவீடு செய்ய வேண்டியுள்ளது.ஆனால், குடியிருப்பு கட்டடங்களுக்கு மறுமதிப்பீட்டின் படி கூடுதல் வரி வசூலிக்க வேண்டாம் என, மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால், மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பாதிக்கப்படுவதுடன், மறுமதிப்பீட்டிற்கு செலவிட்ட தொகையும் வீணாகி உள்ளது.சொத்து வரியில் மாறுபாடு இருப்பது பெரும்பாலும், பெரிய அளவிலான குடியிருப்புகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளாக உள்ளன. அவர்கள் மாநகராட்சிக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே, 2.32 லட்சம் வீடுகளில் உள்ள சொத்து வரி மாறுபாட்டில் தீர்வு காணப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவால், கட்டடத்தின் முறையான அளவை காட்டி, 10 லட்சம் கட்டடங்களுக்கு சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

குமார்பாபு
அக் 03, 2024 09:44

குறைச்சுக் காட்டுனா லஞ்சம் வாங்கிட்டு அப்ரூவல் குடுத்த திருட்டு திராவிட அதிகாரிகளை ஊட்டுக்கு அனுப்ப மாட்டாங்க.


N Sasikumar Yadhav
அக் 03, 2024 07:36

திருட்டு திராவிட மாடல் ஆட்சியில் நேர்மையாளர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் ஆட்சியாளர்கள் நேர்மையாக இருந்தால் ஆட்சியும் நேர்மையாக இருக்கும் அதற்கு வாக்களிக்க பணம் வாங்காத நேர்மையான வாக்காளர்கள் இருக்க வேண்டும் பணம் வாங்கிவிட்டு அரிச்சந்திரன் மாதிரியே வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போட்டுவிடுகிறார்கள்


முக்கிய வீடியோ