நாளை வெளியாகப்போகும் லோக்சபா தேர்தல் முடிவில், கோவை தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு, கொங்கு மண்டல மக்களிடம் மேலோங்கியுள்ளது.லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள், நாளை எண்ணப்படவுள்ளன. தமிழகத்தில் 39 தொகுதிகள் இருந்தாலும், கோவை தொகுதியின் முடிவைத்தான், மாநிலமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.பா.ஜ., தலைவர் அண்ணாமலை இங்கு போட்டியிடுவதால், அவர் வெற்றி பெறுவாரா, இல்லையா என்பதை அறிய, பல கோடி மக்களும் ஆர்வமாகவுள்ளனர். இதற்காக, பணம், பொருள், வாகனம், சொத்துக்கள் என பலவற்றை வைத்து பந்தயமும் கட்டியுள்ளனர். இவர்களில் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பது நாளை மாலைக்குள் தெரிந்து விடும். கோவையின் வளர்ச்சி
இந்த எதிர்பார்ப்புகள், விருப்பங்களைத் தாண்டி, கோவை தொகுதியில் வெற்றி பெறப்போகும் வேட்பாளரை வைத்தே, கோவையின் அடுத்த ஐந்தாண்டு வளர்ச்சி இருக்கப்போகிறது.விமான நிலைய விரிவாக்கம், பசுமை வழிச்சாலைகள், புறவழிச்சாலை, ரயில்வே கோட்டம், புதிய ரயில்கள் போன்ற கோவைக்குக் கிடைக்கும் பல திட்டங்களால் தொழில் கேந்திரமாகவுள்ள, கொங்கு மண்டலமே பயன் பெறும். அதனால் கோவை தொகுதியின் வெற்றியை, மற்ற மக்களை விட, தொழில் முனைவோர் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.ஏனெனில், கோவை தொகுதியில் இதுவரையிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களே அதிகமாக பதவி வகித்துள்ளனர். இவர்கள் கோவைக்கு புதிய திட்டங்கள் கொண்டு வருவதை விட, வரும் திட்டங்களை எதிர்ப்பவர்களாகவே இருந்துள்ளனர்.மத்தியில் காங்., பா.ஜ., ஆளும்கட்சியாக இருந்தபோது, கோவையில் அக்கட்சிகளின் எம்.பி., இருந்தும் மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்பட்டதில்லை. ஆனால் முதல் முறையாக அதற்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. அமைச்சராவாரா அண்ணாமலை?
மத்தியில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்து, கோவையிலும் அண்ணாமலை வெற்றி பெறும்பட்சத்தில், அவருக்கு நிச்சயமாக மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், கோவையில் மத்திய அரசால் நிறைவேற வேண்டிய பல திட்டங்களும் விரைவாக நிறைவேறும்; புதிய திட்டங்களும் வரும்.ஒரு வேளை, மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்து, கோவையில் தி.மு.க., அல்லது அ.தி.மு.க., வேட்பாளர்களில் ஒருவர் வென்று விட்டால், மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.,என்ற அந்தஸ்துடன், கோரிக்கைகளுக்காகப் போராடும் நிலையே ஏற்படும். மற்றொரு வாய்ப்பாக, 'இண்டியா' கூட்டணி வென்று, கோவையில் தி.மு.க., வேட்பாளர் வென்றாலும், மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைப்பது பெரிதும் சந்தேகமே.இதனால் கோவை தொகுதியின் வெற்றி, தோல்வியை எதிர்பார்ப்பவர்கள், மத்தியில் எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ளவும் பெரிதும் ஆவலுடன் இருக்கிறார்கள். இது இரண்டும் முரணாக இருந்தால், கோவைக்கு மீண்டும் ஐந்தாண்டுகள் வீணாகக் கழியும் என்பதே, தொழில் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கவலையாகவுள்ளது.கோவை எம்.பி., க்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், அதை வைத்து அரசியல் செய்து, கட்சியை வளர்ப்பதை விட, கோவைக்கான திட்டங்களை விரைவாகச் செய்து கொடுத்தாலே, கொங்கு மண்டல மக்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் அக்கட்சி பெற்று விடலாம்.அதை விடுத்து, அரசியல் நிலைப்பாடு என்று சொல்லி, திட்டங்களை எதிர்ப்பதால் யாருக்கும் எந்த பயனுமில்லை. எதிர்க்கட்சி எம்.பி.,யே மீண்டும் கோவைக்குக் கிடைத்தாலும், எதையும் எதிர்க்காமல் இருக்க வேண்டுமென்பதே இங்குள்ள மக்களின் வேண்டுதல்!- நமது நிருபர் -