உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குழந்தைக்கு ஸ்வீட்டும், கேக்கும் அடிக்கடி கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம்!

குழந்தைக்கு ஸ்வீட்டும், கேக்கும் அடிக்கடி கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'எவ்வளவு வேணாலும் நொறுக்குத்தீனி குடுங்க ... சாப்பிட்டுக்கிட்டே இருப்பா. சாப்பாடு மட்டும் இறங்காது'-- இப்படி புலம்பாத தாய்மார்களை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு சாக்லேட், துரித உணவுகள் குழந்தைகளை அடிமைப்படுத்தி விட்டன.இதனால், குழந்தைகள் மத்தியில் உடல் பருமன், ஆரோக்கிய பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிள்ளைகள் அழுதால் சாக்லேட், விளையாட்டில் ஜெயித்தால் சாக்லேட், பிறந்தநாளில் சாக்லேட் என, மகிழ்ச்சி என்றாலே ஸ்வீட் எடுத்து கொண்டாடி வருவது, அவர்களின் ஆரோக்கியத்துக்கே உலை வைத்து விடுகிறது.இந்த பழக்கம் எதிர்காலத்தில் புற்றுநோயை கூட வரவழைக்கும் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். அதாவது, நம் குழந்தைகளுக்கு நாமே சிறுக சிறுக, விஷம் கொடுக்கிறோம்.உடல் பருமனுடன் உள்ள குழந்தைகளுக்கு, குழந்தை பருவம் மட்டுமின்றி எதிர்காலத்தில் மெட்டபாலிக் சிண்ட்ரோம், இதய நோய்கள், டைப் 2 சர்க்கரை, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு படிந்த கல்லீரல் உள்ளிட்ட, பல்வேறு நோய் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. சந்தைகளில் புதிது புதிதாக வரும் வண்ணங்கள் நிறைந்த சாக்லேட், பாக்கெட் தீனிகள், துரித உணவு முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும்; உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஊக்குவிக்க வேண்டும் என்கிறார், அரசு மருத்துவமனை டாக்டர் செல்வராஜ்.அவர் கூறுகையில், '' குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்குள் தான் சுவை நரம்புகள் வளர்ச்சியடைகின்றன. அப்போது கொடுத்து பழக்கும் உணவு எதுவானாலும், வாழ்நாள் முழுவதும் விரும்பி உண்பார்கள். அதை தவிர்த்து, சாக்லேட், நிறமிகள், சர்க்கரை நிறைந்த உணவு பொருட்களை கொடுத்துவிட்டு, 10 வயதில் கீரை சாப்பிடுவதில்லை என புலம்பி பயனில்லை.ஆறு மாதத்திற்கு மேல், திட உணவு உட்கொள்ள துவங்கும் போது, காய்கறி, கீரைகள், தானிய உணவுகள், சத்தான உணவு முறைகளை பழக்க வேண்டும். பெரியவர்களும் உரிய உணவு முறைக்கு மாறவேண்டியது கட்டாயம்.ஒரு நாளைக்கு, ஒரு வேளையாவது வீட்டில் தானிய உணவு சமைக்க வேண்டும். சிறு வயது முதல் தவறான உணவு பழக்கங்களுக்கு மத்தியில், வளரும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் அதிகம், '' என்றார்.குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்குள் தான், சுவை நரம்புகள் வளர்ச்சியடைகின்றன. அப்போது கொடுத்து பழக்கும் உணவு எதுவானாலும், வாழ்நாள் முழுவதும் விரும்பி உண்பார்கள். சாக்லேட், நிறமிகள், சர்க்கரை நிறைந்த உணவு பொருட்களை அந்த வயதில் கொடுத்துவிட்டு, 10 வயதில் கீரை சாப்பிடுவதில்லை என புலம்பி பயனில்லை. சிறு வயது முதல் தவறான உணவு பழக்கங்களுக்கு மத்தியில், வளரும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் அதிகம்.

அதிரவைக்கும் புள்ளி விபரம்

* 1975ல் நான்கு சதவீதமாக இருந்த குழந்தைகள் உடல் பருமன், 2016 ல் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.* 2030ல் 254 மில்லியன் குழந்தைகள் உலகளவில் உடல்பருமனுடன் இருப்பார்கள்.* இந்தியாவில் தேசிய குடும்ப நல ஆய்வுகளின் படி, 2019 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ல், 2.1 சதவீதம் குழந்தைகள் உடல்பருமன் அதிகரித்துள்ளன. * இந்தியாவில் மட்டும், 2030ல் 27.48 மில்லியன் 5 வயது முதல் 19 வயதுள்ள குழந்தைகள், உடல் பருமனுடன் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஏப் 05, 2025 22:04

தாய்மார்கள் தாங்கள் நிம்மதியாக டிவி சீரியல்கள் பார்க்வேண்டும் என்று தங்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் போன்ற இனிப்புக்களை கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள்.


அப்புசாமி
ஏப் 05, 2025 09:27

இந்தியாவுல எங்கே பார்த்தாலும் சோறு, பிரியாணி, நொறுக்குத்தீனி, பானி பூரி. ரயில்ல போனாலும், பஸ், கார்ல போனாலும் எதையாவது துண்ணுக்கிட்டே போக வேண்டியது. குப்பையை அங்கங்கே வீசி எறிஞ்சுட்டு போயிட வேண்டியது. அது சாக்கடையிலே அடைச்சுக்கிட்டு மழை பெஞ்சா வீட்டுக்குள்ளே வெள்ளம் வந்து கதற வேண்டியது.


முக்கிய வீடியோ