தி.மு.க.,வில் தலைவருக்கு அடுத்த பொதுச்செயலர் பொறுப்பில் இருக்கும் துரைமுருகனை, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lwwagde9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க.,வில் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் பதவிகள் அதிகாரமிக்கவை. அந்தப் பதவிகளில் தலைமைக்கு நெருக்கமானவர்களை பார்த்து நியமிப்பது வழக்கம். கருணாநிதி கட்சி தலைவராக இருந்த வரை, அவருக்கு மிக நெருக்கமான அன்பழகனை பொதுச்செயலராகவும், ஆற்காடு வீராசாமியை பொருளாளராகவும் நியமித்து, தன் அருகிலேயே வைத்துக் கொண்டார். தலைமை அதிருப்தி
கட்சியில் எந்த முக்கியமான முடிவையும், தலைவராக இருக்கும் கருணாநிதியே எடுத்து வந்தார் என்றாலும், கட்சி விதிமுறைப்படி, பொதுச்செயலர் பெயரில் தான் வெளியிடப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில், பொருளாளர் பொறுப்பில் இருந்து ஆற்காடு வீராசாமியை நீக்கிய கருணாநிதி, அதில் தன் மகன் ஸ்டாலினை நியமித்தார். அந்த அறிவிப்பு கூட, பொதுச்செயலராக இருந்த அன்பழகன் பெயரில் தான் வெளியானது. கருணாநிதி மறைவுக்கு பின், கட்சிக்கு தலைமையேற்ற ஸ்டாலின், சீனியர் என்ற முறையில் அமைச்சர் துரைமுருகனை பொதுச்செயலர் ஆக்கினார். கருணாநிதி காலத்து மரபை மீறாமல், பொதுக்குழு, செயற்குழு அறிவிப்புகளும், நிர்வாகிகள் நீக்கம், நியமனம் உள்ளிட்ட தகவல்களும், பொதுச்செயலர் துரைமுருகன் பெயரில் தான் வெளியாகின்றன.ஆனால், கருணாநிதி காலத்தில் அன்பழகனோடு இருந்ததை போன்ற இணக்கமான சூழல், இருவருக்கும் இடையே இல்லை. அன்பழகனோடு கலந்துரையாடி அவருடைய சம்மதம் பெற்றே, முக்கியமான சில முடிவுகளை கருணாநிதி எடுத்தார்.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வில் அந்த நிலைமை தற்போது இல்லை. முதல்வராக உள்ள ஸ்டாலின், தன் மகனும் துணை முதல்வராகவும், இளைஞர் அணி செயலராகவும் இருக்கும் உதயநிதியிடம் மட்டுமே ஆலோசித்து எல்லா முடிவுகளையும் எடுத்து வருகிறார்.சில நேரங்களில் மட்டும், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலர் கே.என்.நேரு, மூத்த அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோரிடம் கலந்து பேசப்படுகிறது. மற்ற யாருக்கும் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இந்நிலையில், பொதுச்செயலர் துரைமுருகன் மீது, தலைவர் ஸ்டாலின் மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிருப்தியில் இருக்கின்றனர். 'வளமான' மணல் குவாரிகளை நிர்வகிக்கும் கனிமவளத் துறைக்கு துரைமுருகனை அமைச்சராக்கிய ஸ்டாலின், துறையை பிரச்னையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். நீக்க முடிவு?
ஆனால், அத்துறையில் ஏகப்பட்ட பிரச்னைகள் அணிவகுத்தன. அதனால், 'தன் எதிர்பார்ப்புக்கு மாறாக துரைமுருகன் செயல்படுகிறார்; சீனியரான அவரை, பொறுப்பில் இருந்து எப்படி நீக்குவது என்று தெரியவில்லை' என கட்சியின் மற்ற சீனியர்களிடம் புலம்பி வந்தார் முதல்வர் ஸ்டாலின்.தொடர்ந்து சர்ச்சைகள் வரவே, வேறு வழியின்றி, துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறையை எடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் கொடுத்தார். இதனால், கட்சித் தலைமை மீது துரைமுருகனுக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், கட்சி தொடர்பான அனைத்து ஆலோசனைகளுக்கும் துரைமுருகனை புறக்கணித்தனர். தேர்தல் பணிகள் தொடர்பான எந்த ஆலோசனைக்கும் அவர் அழைக்கப்படாமல் ஒதுக்கப்பட்டார். தேர்தல் பணிகளை திட்டமிடுவதற்கான ஒருங்கிணைப்பு குழுவிலும் இடமில்லை; மண்டல பொறுப்பாளர் தேர்விலும், அவரது சிபாரிசு ஏற்கப்படவில்லை. இப்படி தலைமையின் தொடர் புறக்கணிப்புகளை தெரிந்து கொண்ட துரைமுருகனும், தன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால், அவர் மீதான அதிருப்தி கோபமாக மாறியிருப்பதாகவும், அவரை பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து நீக்கவும், ஆளுங்கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் வெளியாக உள்ள அந்த அறிவிப்பு மட்டும், கட்சி தலைவர் பெயரில் இருக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்., 15ல், கட்சியின் முப்பெரு விழா, முக்கியமான நிகழ்ச்சியாக நடத்தப்படும். அதற்கு முன், இந்த முக்கிய மாற்றத்தை செய்ய, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். துரைமுருகன் விடுவிக்கப்படும் நிலையில், தற்போது பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு, பொதுச்செயலர் ஆகலாம். பொருளாளர் பொறுப்பில், எ.வ.வேலு நியமிக்கப்படலாம் என்கிறது அறிவாலய வட்டாரம். - நமது நிருபர் -