நவாப் மாலிக் வேட்பு மனு தாக்கல்: மஹா., ஆளும் கூட்டணியில் புகைச்சல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதற்கு, மஹாராஷ்டிராவில் ஆளும் மஹாயுதி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு, நவ., 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. நவ., 23ல் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.கடும் எதிர்ப்புசட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, நேற்று முன்தினம் கடைசி நாள். தேசியவாத காங்., முன்னாள் அமைச்சரான நவாப் மாலிக், மன்குர்த் சிவாஜி நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.வேட்பு மனு தாக்கல் முடிவதற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், அவருக்கு, தேசியவாத காங்., சார்பில் போட்டியிடுவதற்கான ஏ.பி., படிவம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகியுள்ளார்.ஆளும் மஹாயுதி கூட்டணியில், இந்தத் தொகுதி, தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், நவாப் மாலிக் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு, சிவசேனா மற்றும் பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.மஹா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்த நவாப் மாலிக், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அவருடைய கூட்டாளிகளான சோட்டா ஷகீல், டைகர் மேமன் ஆகியோருடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக, கடந்த 2022ல் கைது செய்யப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக, இந்தாண்டு ஜூலையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.தர்ம சங்கடம்சரத் பவார் ஆதரவாளராக இருந்த நவாப் மாலிக், தேசியவாத காங்., உடைந்தபோது, அஜித் பவாருடன் இணைந்தார். தற்போதைய கூட்டணி ஆட்சியில் அஜித் பவாரின் தேசியவாத காங்., இணைந்தபோதும், நவாப் மாலிக்கை பா.ஜ., மற்றும் சிவசேனா எதிர்த்து வந்தன.சட்டசபை கூட்டத் தொடரின்போது, ஆளும் தரப்பில் அவர் அமர்ந்ததற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக அஜித் பவாருக்கு, பா.ஜ.,வின் துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கடிதம் எழுதியிருந்தார். மேலும், நவாப் மாலிக்குக்கு எதிராக பா.ஜ., மற்றும் சிவசேனா வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வந்தன.இந்நிலையில், அவர் தேசியவாத காங்., வேட்பாளராகியுள்ளது, கூட்டணியில் உள்ள பா.ஜ., மற்றும் சிவசேனாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.''இந்த விஷயத்தில் எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தங்களுடைய கட்சியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய தேசியவாத காங்.,குக்கு உரிமை உள்ளது.''ஆனால், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதை ஏற்க முடியாது. நவாப் மாலிக்குக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டோம்,'' என, மும்பை பா.ஜ., தலைவர் ஆஷிஷ் ஷெல்லார் கூறியுள்ளார்.
8,000 பேர் மனு!
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் மஹாயுதி கூட்டணியில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கட்சிகள் இடம்பெற்றுள்ள, எதிர்க்கட்சிகளின் மஹா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சமாஜ்வாதி என, பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு 7,995 பேர் 10,905 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2019 தேர்தலில், 5,543 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இறுதியில், 3,239 பேர் போட்டியிட்டனர்.தற்போது, அதைவிட அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாசிக் மாவட்டத்தில் மட்டும் 361 பேர், 506 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இந்தத் தேர்தலில் மிகவும் அதிகபட்சமாக, பா.ஜ., 148 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மஹாயுதி கூட்டணியில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, 80 தொகுதிகளிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., 53 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஐந்து இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகள் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.மஹா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்., 1-03 இடங்களிலும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 89 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்., 87 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஆறு தொகுதிகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று தொகுதிகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.