உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், தேசிய துக்க தினத்திலும், சால்வை, கை தட்டலுடன் அரசு விழாக்களும், துணை முதல்வர் பிறந்த நாள் விழாவும், அமைச்சர் தலைமையில் நடந்ததால், தி.மு.க.,வினரே அதிருப்தியடைந்தனர்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, ஒரு வாரம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.ஆனால், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் கடத்துாரில், அரசு விழா நடந்தது. வாழை தோரணங்கள் கட்டப்பட்டு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி., ஈஸ்வரசாமி உள்ளிட்டோருக்கு, கைதட்டல்களுடன், சால்வை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மவுன அஞ்சலி
மேடையில், அமைதியாக விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு, முடிவுற்ற திட்ட பணிகள் துவக்கம், ரேஷன் கடை திறப்பு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடந்தது.மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காத நிலையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மக்கள் தொடர்பு அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து, கொமரலிங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சிகள் மற்றும் ஒன்றிய பகுதிகளில், 62.98 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் துவங்கி வைக்கும் விழாவும், 5.79 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.இதில், அமைச்சர் பேசுகையில், முன்னாள் பிரதமர் மறைவால், அமைதியாக விழா நடப்பதாக தெரிவித்ததோடு, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார். முன்னதாக, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி மட்டும் செலுத்தப்பட்டது. உடுமலை நகராட்சி, தாகூர் மாளிகையில், மாலை, 5:00 மணிக்கு, 3 மாதமாக செயல்பட்டு வரும், மாவட்ட அரசு இசைப்பள்ளி துவக்க விழாவும், மாவட்ட அளவில், கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவும், மார்கழி கலை இலக்கிய விழா நடந்தது. அதிருப்தி
தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டு, பா.ஜ.,- அ.தி.மு.க., கட்சிகளே அறிவித்திருந்த போராட்டங்களை ரத்து செய்த நிலையில், காங்., உடன் கூட்டணி அமைத்து, 10 ஆண்டுகள், மன்மோகன்சிங் அமைச்சரவையில் அமைச்சர் பதவிகளை பெற்று, அனுபவித்து வந்த தி.மு.க., அரசு, அமைச்சர் தலைமையில் விழாக்கள் நடத்தியது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேடை அலங்காரம்!
கடத்துாரில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவும், அதே மேடையில் நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு, வேஷ்டி, சேலைகளை அமைச்சர் வழங்கினார்.விழா மேடையில், மேற்பகுதியை அலங்கரிக்க, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு, முதியோர், ஓய்வூதிய திட்டம் பெறுவோருக்கு, 2021-22ம் ஆண்டு வழங்கிய சேலை, 2023ம் ஆண்டு, பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கிய சேலைகள் பயன்படுத்தி, அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசு, மக்களுக்கு வழங்கிய சேலை, அரசு விழாவில் மேடையை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டிருந்தது.