உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உ.பி., மீதான கனிவு பார்வை தமிழகம் மீது இல்லையே ஏன்?

உ.பி., மீதான கனிவு பார்வை தமிழகம் மீது இல்லையே ஏன்?

சென்னை:''உ.பி., மீதான மத்திய அரசின் கனிவு பார்வை, தமிழகத்தின் மீது இல்லையே ஏன்?'' என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

பா.ஜ., - வானதி சீனிவாசன்: பெண்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என, கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். தமிழகம் முன்னேறிய மாநிலம் என்கிறோம். ஆனால், பெண்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவு, ரத்தசோகை பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளது. என் கோவை தெற்கு தொகுதியில், அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 20 சதவீத பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது.அமைச்சர் கீதா ஜீவன்: மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தை விட, தமிழகத்தில் கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உணவு பழக்க வழக்கங்களால் பெண்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அனைவரும் இணைந்து செயல்பட்டால், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்க முடியும்.வானதி சீனிவாசன்: பெண்களின் பெயரில் சொத்துக்கள் வாங்கினால், ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்பது, நல்ல விஷயம். குறைந்தபட்சம் ஐந்து சதவீதம் பதிவு கட்டணம் குறைத்தால்தான் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்க ஆர்வம் காட்டுவர்.அமைச்சர் தங்கம் தென்னரசு: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பிடித்து வைத்துள்ள, 2,000 கோடி ரூபாய், 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள, 3000 கோடி ரூபாய், ஒவ்வொரு திட்டத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதை போல தமிழகத்திற்கும் மத்திய அரசு கொடுக்க வேண்டும். உ.பி., மீது கனிவு பார்வை, ம.பி., மீது அன்பு பார்வை, பீஹாருக்கு கருணை பார்வை இருப்பதுபோல, தமிழகத்திற்கும் கருணை பார்வை கிடைத்து விட்டால், நாங்கள் மகிழ்வோம்.வானதி சீனிவாசன்: இணக்கமாக செயல்பட, மத்திய அரசு தயாராகவே உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நிதிக்குழு பரிந்துரையின்படி மாநிலங்களின் நிதியை, மத்திய அரசு வழங்காமல் இருக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்களால், தமிழகம்தான் அதிகம் பலனடைந்துள்ளது. தங்கம் தென்னரசு: தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு குறைந்து கொண்டே வருகிறது. 9வது நிதிக்குழுவில் தமிழகத்திற்கு, 7 சதவீதம் நிதிப்பகிர்வு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, 15வது நிதிக்குழுவில், 4.07 சதவீதமாக குறைந்து விட்டது. தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி, 2.63 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை.கடந்த 2015 -16ல் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 1.6 சதவீதமாக இருந்த மத்திய அரசின் உதவி மானியம், 2024- - 25ல் 0.66 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால், 2015 - -16 முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில், மாநில அரசு மீது சுமையை ஏற்றி வருகிறது. ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, மகாராஷ்டிரா, உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குகின்றனர். கேட்டால் இணக்கமாக இல்லை என்கின்றனர். 'உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்பதுதான் எங்கள் கொள்கை. மொழி கொள்கையை விட்டு கொடுத்துதான், சமரசம் செய்து நிதியை பெற வேண்டும் என்றால், அதை தி.மு.க., அரசு ஏற்காது.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

cyber cyber
மார் 20, 2025 18:22

குடித்து செத்தவர்கள் மீது உள்ள கனிவு , கோவில் வரிசையில் செத்தவர்கள் மீது இல்லையே.


எவர்கிங்
மார் 20, 2025 16:17

உங்கள் முதல்வருக்கு கூட சிறுபான்மையினர் மேல் உள்ள கனிவான பார்வை இந்துக்கள் மீது இல்லை


Venugopal, S
மார் 20, 2025 08:23

குறிபிட்ட மதத்திற்கு இருக்கும் கருணை மற்ற மதத்தினர் மீது இல்லயே? ஓட்டு அரசியல்?


Gowtham Saminathan
மார் 20, 2025 07:43

அதே தான் அமைச்சரே.. திமுக உ.பி குற்றவாளிகளுக்கு நீங்க காட்டுற கனிவு தமிழக மக்கள் மீது இல்லையே


अप्पावी
மார் 20, 2025 07:42

இங்கேருந்து தமிழில் கடிதம் எழுதுனா அங்கே யாருக்கு புரியும்? இங்கிலீஷில் எழுதினால் படிக்கவே மாட்டாங்க. அங்கே எல்லாமே இந்தில மட்டும்தான். மும்மொழியா இந்தி தான் படிக்கிறாங்க. மானம், வெக்கம். பாக்காம இந்தி படிங்க. தமிழுக்கு நீங்களும் சேர்ந்து சங்கு ஊதுங்க.


Rajasekar Jayaraman
மார் 20, 2025 06:02

சென்னை மீது இருந்த கருணை விழுப்புரம் வெள்ளநிவாரணத்தில் இல்லையே அமைச்சரே அது ஏன்.


Padmasridharan
மார் 20, 2025 04:54

பெண்கள்_ஆண்கள் சரி சமம் என்று வெறும் வாய் வார்த்தைகள்தான், ஆனால் பெண்கள் முன்னுரிமை அதிகமாக்கி ஆண்களுக்கு மது கடைகள் ஒதுக்குகின்றனர். எல்லா அரசியல் கட்சிகளும் குரல் மட்டும்தான் கொடுக்கின்றனர். சரியான செயல்கள் இல்லை. உபி யும், இந்திய நாடுதானே. மும்மொழி கொள்கை வேண்டாம். எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளும் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள். சினிமா நடிகைகள் போல டெல்லியை சுற்றி வாருங்கள்.


சமீபத்திய செய்தி