சைபர் மோசடி கும்பலிடம் ஏமாந்த 6 பேர்: 3 லட்சம் இழப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் ஏமாந்து, 6 பேர் ரூ. 3 லட்சம் பணத்தை இழந்துதுள்ளனர்.புதுச்சேரி மிஷன் வீதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு, ஒரு புதிய எண்ணில் இருந்து, வங்கி விளம்பரம் தொடர்பான லிங்க் வந்துள்ளது. அதனை வேணுகோபால் கிளிக் செய்ததால், அவரது வங்கி விவரங்கள் எடுக்கப்பட்டு, சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து, ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் எடுத்து, மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.பாகூரை சேர்ந்த ராம்குமாரை, ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் வரை லோன் வழங்குவதாக கூறியதுடன், லோன் பெற செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார். இதை நம்பிய ராம்குமார், மர்ம நபருக்கு ரூ. 87 ஆயிரம் அனுப்பி ஏமாந்துள்ளார்.முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பரணிதரன், ஆன்லைனில் வந்த கார் விற்பனை விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, மறுமுனையில் பேசிய மர்ம நபர், கார் விற்பனைக்கு தயாராக உள்ளதாகவும், அதற்காக பணத்தை உடனே செலுத்தினால், டெலிவரி செய்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி, பரணிதரன் ரூ. 45 ஆயிரம் பணத்தை, அந்த நபருக்கு அனுப்பி ஏமாந்துள்ளார்.இதே போல், பகுதி நேர வேலை என நம்பி, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்த முத்தியால்பேட்டையை சேர்ந்த கீர்த்தி ரூ.20 ஆயிரமும், நெல்லித்தோப்பை சேர்ந்த பிரியதர்ஷினி ரூ.19 ஆயிரமும், புதுச்சேரியை சேர்ந்த வசந்தராஜா ரூ. 3,550 என, மொத்தம் 6 பேர், ஆன் லைன் மோசடி கும்பலிடம் சிக்கி, ரூ.3 லட்சத்து 1,550 பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.