புதுச்சேரி ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு
புதுச்சேரி: புதுச்சேரியின் முக்கிய ஏரிகளில், வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.புதுச்சேரி அரசு வனத்துறை சார்பில், ஊசுடு ஏரி, பாகூர் ஏரி, அரியாங்குப்பம் அலையாத்தி காடுகள் ஆகிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. எத்தனை வகையான பறவைகள் புதுச்சேரிக்கு வருகின்றன, அவை எங்கிருந்து வருகின்றன, அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது இந்த கணக்கெடுப்பில் இடம்பெற்றன.அப்போது, அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய கூழைக்கடா, அருவாள் மூக்கான், கர்னுாள், பாம்புதாரா, ஆளா போன்ற பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் பிளமிங்கோ, பூ நாரை போன்ற பறவைகள் வர துவங்கும். இவை குஜராத்தில் துவங்கி, கர்நாடகா வழியாக புதுச்சேரி ஏரிக்கு வந்து, துாத்துக்குடிசெல்லும் என கணக்கெடுப்பில் பங்கேற்ற பறவை ஆராய்ச்சியாளர் பூபேஷ் குப்தா கூறினார்.இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பறவைகளின் பெயர், அவற்றின் வாழ்க்கை, பயன், நீர்வளம் ஆகியவற்றை தெரிந்து கொண்டனர்.