பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையத்தில் பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். புதுச்சேரி, தர்மபுரி, சவரிநகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 36; அய்யங்குட்டிப்பாளையத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகே இருந்த நாய் ஒன்று கடந்த 8ம் தேதி அய்யங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமியை கடித்தது. அந்த நாயை பாலகிருஷ்ணன் தான் வளர்த்து வருவதாக நினைத்த லட்சுமியின் மகன் அப்பு (எ) யுவராஜ், அவரது நண்பரான குருமாம்பேட், மேட்டு தெருவை சேர்ந்த நத்தகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பிரியாணி கடைக்கு சென்று, அங்கிருந்த நாயை கல்லால் அடித்து விரட்டினர். பின், கடையின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த ராம்தபா, 36; ஆகியோரை ஆபாசமாக திட்டி, பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் ராம்தபா ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பாலகிருஷ்ணன் புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.