பேனர் அச்சடிப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
திருக்கனுார்: அனுமதி இல்லாமல் பேனர் அச்சடிக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எழில்ராஜன் எச்சரித்துளளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் அச்சடித்து தரும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தொழில் உரிமம் பெற வேண்டும்.மேலும், கடைகளுக்கு பேனர் அச்சடிக்க வரும் வாடிக்கையாளர்கள், பேனர் வைப்பதற்கு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்றால் மட்டுமே பேனர் அச்சடித்து தர வேண்டும். அதற்கான அனுமதியை அச்சடிக்கும் பேனர் ஓரத்தில் பதிவிட வேண்டும். இல்லையெனில் கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி, உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.