மணல் திருட்டை தடுக்க கான்கிரீட் சுவர் அமைப்பு
பாகூர்: தினமலர் செய்தி எதிரொலியாக, குருவிநத்தம் தென்பெண்ணை சித்தேரி அணைக்கட்டு பகுதியில், மணல் கொள்ளையை தடுக்கும் வகையில், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.பாகூர் அடுத்த குருவிநத்தம் தென்பெண்ணையாற்றில் சித்தேரி அணைக்கட்டு பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கும் வகையில், இருண்டு பக்கங்களிலும் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், வடக்கு பகுதியில் இருந்த தடுப்பு சுவரை மர்ம நபர்கள் இடித்து அப்புறப்படுத்திய நிலையில், அதன் வழியாக வாகனங்களை ஆற்றுக்குள் இறக்கி மணல் திருட்டில் ஈடுபட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இது தொடர்பாக, புதுச்சேரி தெற்கு மாவட்ட சப் கலெக்டர் சோம சேகர அப்பாராவ் கொட்டாரு ஆய்வு மேற்கொண்டு மணல் கொள்ளை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் மூலமாக, குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு பகுதியின் வடக்கு பகுதி வழியாக வாகனங்கள் ஆற்றுக்குள் செல்வதை தடுக்கும் வகையில், கான்கீரிட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.