| ADDED : ஏப் 13, 2024 04:40 AM
அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, கதிர்காமம், இந்திரா நகர் தொகுதியில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்த மகாபாரத கர்ணன் போல் முதல்வர் ரங்கசாமி பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து தவறான நபருக்கு பிரசாரம் செய்கிறார். கடந்த 2008ம் ஆண்டு நமச்சிவாயம், ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, வைத்திலிங்கத்தை குறுக்கு வழியில் முதல்வர் ஆக்கினார்.இத்தேர்தல் முடிந்ததும் ரங்கசாமியை மாற்றிவிட்டு, பா.ஜ.வைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவார். இதை என்.ஆர்.காங்., தொண்டர்கள் உணர வேண்டும்.தமிழக முதல்வர் ஸ்டாலின், நமச்சிவாயத்தை 7 கட்சி மாறி வந்தவர். முதல்வர் ரங்கசாமி உயரத்திற்கு ஏற்ப அறிவு இல்லாதவர் என விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளித்த நமச்சிவாயம், முதல்வர் குறித்த கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.ஒரு கட்சி தலைவர், முதல்வராக உள்ளவரை வேறு மாநில முதல்வர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும்போது, அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஏன் முன்வரவில்லை.கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜ. பொறியில் சிக்கிய வெள்ளை எலி போல முதல்வர் சிக்கி தவித்து கொண்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமி நீக்கப்பட்டபோது, அ.தி.மு.க., தான் ஆதரவு கரம் நீட்டி அவரை மீண்டும் முதல்வர் ஆக்கியது.மின்துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில், 23 முறை வாய்தா வாங்கி அரசு, ஒரு முறை கூட தனியார் மயமாக்க மாட்டோம் என தெரிவிக்கவில்லை. முதல்வரை தொடர்ந்து அவமதிக்கும் பா.ஜ.,வுக்கு உண்மையான என்.ஆர்.காங்., தொண்டர்கள் ஓட்டுப்போடக் கூடாது. இவ்வாறு அவர், பேசினார்.