இன்ஜினியரிங் மாப் ஆப் கலந்தாய்வு; இரண்டாம் நாளில் குவிந்த மாணவர்கள்
புதுச்சேரி: இன்ஜினியரிங் மாப் ஆப் கலந்தாய்வில் 2ம் நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சேர்க்கை ஆணை பெற்றனர். புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள பி.டெக்., படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீடு மற்றும் சுயநிதி இடங்களுக்கு 3 கட்டங்களாக சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.பி.டெக்., இடங்களை நிரப்புவதற்கான மாப் ஆப் கலந்தாய்வு சென்டாக் அலுவலகத்தில் துவங்கியது. நேற்று முன்தினம் நடந்த முதல் நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர சேர்க்கை ஆணை பெற்றனர்.தொடர்ந்து 2-வது நாளாக நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கிய கலந்தாய்வில் புதுச்சேரி தொழில் நுட்ப கல்லுாரி, அரசு மகளிர் இன்ஜினியரிங் கல்லுாரி, காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் உள்ள சுயநிதி இடங்களை ஜே.இ.இ. மதிப்பெண் அடிப் படையில் நிரப்புவதற்கான கலந்தாய்வு நடந்தது.இதில் புதுச்சேரி மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில் சுயநிதி இடங்களை நிரப்புவதற்கும், மதியம் 12 மணிக்கு அரசு மற்றும் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கு கலந்தாய்வு நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு கல்லூரிகளில் சேர சேர்க்கை ஆணை பெற்றனர். இக்கலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சம்மந்தப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும் என்று சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.