உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாங்கனி திருவிழாவை முன்னிட்டு மாப்பிளை அழைப்பு நிகழ்ச்சி

மாங்கனி திருவிழாவை முன்னிட்டு மாப்பிளை அழைப்பு நிகழ்ச்சி

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பரமதத்தர் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமானால் அம்மையே அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. பரமதத்த செட்டியார் பட்டுவேட்டி, முத்து மாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டார். முன்னதாக விநாயகர் கோவிலில் சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பாரம்பரியப்படி மாப்பிள்ளையான பரமதத்தர் செட்டியாருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது. உபயதாரர்களான மாப்பிள்ளை வீட்டார் முன்செல்ல பரமதத்தர் செட்டியார் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடந்தது. இன்று (28ம் தேதி) காலை புனிதவதியார் தீர்த்த குளத்தில் புனிதநீராடும் நிகழ்ச்சி, காலை 7:00 மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை10:30 மணிக்கு காரைக்கால் அம்மையார் – பரமதத்தர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு திருமணம் முடிந்த காரைக்கால் அம்மையார் – பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. நாளை 29ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திக்களுக்கு மகா அபிஷேகம், காலை 9 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் வீதியுலா நடைபெற்றும். அச்சமயம் பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி விமர்சையாக நடக்கிறது. அம்மையார் மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு வரும் 29ம்தேதி மாவட்ட நிர்வாகம் அரசு மற்றும் தனியார் பள்ளி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன், தனி அதிகாரி விநாயகமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி