உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் நகராட்சி ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரி : புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள், உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் அமர்ந்து நடத்திய அமைதி போராட்டத்திற்கு, புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் விநாயகவேல் முன்னிலை வகித்தார்.உள்ளாட்சித் துறையில் 2004ம் ஆண்டிற்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தற்காலிக அந்தஸ்து பெற்ற ஊழியர்களுக்கு அரசு ஆணைப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உட்பட 61 பேரை பெரியக்கடை போலீசார் கைது செய்து கலெக்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.