விடுபட்ட மாணவர்களுக்கு லேப்டாப் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
பள்ளி கல்வித் துறை அறிவிப்புகள்:அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 2022-23ம் கல்வியாண்டில் விடுப்பட்ட மாணவர்களுக்கும், 2025-26ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் இலவச லேப்டாப் வழங்கப்படும்.புதுச்சேரியில் இயங்கும் இந்தியாவின் எழுச்சிக்கான பிரதமர் பள்ளிகளில் (பி.எம்.ஸ்ரீ) அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் திறன் வளர்க்க அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த தொடுதிறன் வசதி கொண்ட ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறன் கண்காணிக்க மத்திய அமைச்சக பரிந்துரைப்படி அமைத்த கற்றல் மதிப்பாய்வு மையம் வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும். சி.பி.எஸ்.இ., அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையாக கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., விதிமுறைகளின்படி தீ பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்படுத்த 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.