அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி பரிசளிப்பு
புதுச்சேரி: மேட்டுப்பாளையம், தேவி இனோவென்ச்சர்ஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் கண்ணாடி பிரிவு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கோரிமேடு, இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஹேமலதா, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முத்துலட்சுமி, பொறுப்பாசிரியர் கனிமொழி முன்னிலை வகித்தனர். விழாவில், தேவி இனோவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, மனிதவள பொது மேலாளர் தியாகராஜன், உதவி பொது மேலாளர் ரமேஷ், மூத்த மேலாளர்கள் குமரன், பத்மநாபன் வாழ்த்தி பேசினர். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், இயற்கை வளங்களின் பாதுகாப்பு, நீர் சேமிப்பு, கழிவுகளை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் பயன்பாட்டிற்காக நிறுவனம் மூலம் 84 நாற்காலிகள் வழங்கப்பட்டன.