புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். புதுச்சேரி 16வது சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 9ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. அதில், தே.ஜ., கூட்டணி 18 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி கடந்த 13ம் தேதி முதல்வராகவும், பா.ஜ.,வை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு, கவர்னர் கைலஷ்நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட தே.ஜ., கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க., அன்பழகன் கடந்த 18ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார். அவருக்கு, கவனர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா நேற்று சட்டசபையில் நடந்தது. முதலாவதாக முதல்வர் ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவிப் பிரமாணம் செய்த வைத்தார். தொடர்ந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் 24 எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றுக் கொண்டனர். விழாவிற்கு தாமதமாக வந்த திருபுவனை(தனி) தொகுதி எம்.எல்.ஏ., சாய்சரவணன்குமார் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுக்கு பின், தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை கடந்த 17ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால், தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.