உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு மூன்றாம் நாளிலும் மாணவர்கள், பெற்றோர் ஆர்வம்

புதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு மூன்றாம் நாளிலும் மாணவர்கள், பெற்றோர் ஆர்வம்

புதுச்சேரி : புதுச்சேரியில் கல்வித் திருவிழாவாக நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. மூன்றாம் நாளிலும் மாணவர்கள், பெற்றோர் குவிந்தனர்.பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம்; எதை படித்தால் வாழ்வு வளமாகும்; எதிர்காலம் சிறக்கும் என்ற ஆலோசனை வழங்கும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, கடந்த 29ம் தேதி, புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் துவங்கியது. கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் கல்லுாரி பிரதிநிதிகள், கல்வி யாளர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.

நிபுணர்கள் ஆலோசனை

மூன்றாம் நாளான நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 வரை உயர்கல்வி ஆலோசனை கருத்தரங்கு நடந்தது. 'வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்' குறித்து, எஸ்.என்.ஆர். கல்லுாரி பேராசிரியர் பால்ராஜ், 'வேலைவாய்ப்பை அள்ளித்தரும் படிப்புகள்' என்ற தலைப்பில் கல்வியாளர் மாறன், 'உங்களால் வெற்றி பெற முடியும்' என்ற தலைப்பில் கல்வியாளர் புகழேந்தி ஆகியோர் ஆலோசனை வழங்கி, மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.கல்வி ஆலோசகர்கள் கூறிய, உயர் கல்வி தொடர் பான கருத்துக்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்துக்களை மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் குறிப்பெடுத்துக் கொண்டனர்.வழிகாட்டி நிகழ்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனங்களின் 50 ஸ்டால்கள் இடம் பெற்றன. இங்கு, ஒவ்வொரு கல்லூரியிலும், என்னென்ன படிப்புகள் உள்ளன, அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகள், படிப்பிற்கான வேலை வாய்ப்பு, கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஒரே இடத்தில் மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளுக்கு சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர், அங்கிருந்த கல்வி நிறுவன பிரதிநிதிகளிடம், கல்லுாரிகளின் பாடப்பிரிவுகள், சேர்க்கை முறை, கல்விக் கட்டணம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து, நேரடியாக விளக்கம் பெற்றனர்.

30 மாணவர்களுக்கு பரிசு

மூன்று நாட்கள் நடந்த உயர்கல்வி கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு, முற்பகல் மற்றும் பிற்பகல் என, இரண்டு வேளைகளிலும், பொது அறிவு போட்டி நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு, லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களில் 30 மாணவ மாணவியர் பரிசு வென்றனர்.கடந்த மூன்று நாட்களாக கல்வித் திருவிழாவாக, கோலாகலமாக நடந்த வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று மாலை 6:30 மணியுடன் நிறைவு பெற்றது. ' மூன்று நாட்களும் உயர்கல்வி குறித்த ஆலோசனை பெற்ற மாணவர்கள், பெற்றோர், உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்த குழப்பம் தீர்ந்து, தெளிவு பெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இணைந்து வழங்கியோர்

தினமலர் நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் முக்கிய பங்களிப்பாளர்களாக (பவர்டு பையாக) கரம் கோர்த்து வழங்கின. கோ-பான்சராக, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம் கைகோர்த்தது.மேலும் வழிகாட்டி நிகழ்ச்சியை ருசி பால் நிறுவனம், பிக் எப்.எம்.,-92.7, எஸ்.மீடியோ, அக்குவாகிரீன் பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் ஆகியவை இணைந்து வழங்கின.

நன்றி.. நன்றி.. நன்றி..

தினமலர் நாளிதழின் 29ம் ஆண்டு வழிகாட்டி நிகழ்ச்சி, பெற்றோர், மாணவர்கள் ஆதரவுடன் கடந்த மூன்று நாட்களாக வெற்றிகரமாக நடந்தது. தினமலர் நாளிதழுடன் கரம் கோர்த்து, மாணவர்களுக்கு ஆலோசனை அளித்த அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பயனுள்ள ஆலோசனைகளை வழங்கிய துறைசார் நிபுணர்களுக்கு தினமலர் நாளிதழ் சார்பில், நெஞ்சார்ந்த நன்றிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை