பல் மருத்துவக் கல்லுாரிக்கு இலவச பஸ் வசதி கோரிக்கை
புதுச்சேரி: மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரியில் நோயியல் பயிலும் ஆய்வுக்கூடம் மற்றும் மாணவர்களுக்கு இலவச அரசு பஸ் வசதி செய்ய கவர்னருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கவர்னருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு; புதுச்சேரி அரசு மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி, இந்திய அளவில் உள்ள 287 பல் மருத்துவ கல்லுாரிகளில் 23வது இடத்தில் உள்ளது. 2025–26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் முதலாம் ஆண்டில் 106 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நோயியல் வகுப்பு நடத்த பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு கூடம் இல்லாத காரணத்தால் வாரத்தில் இரு நாட்கள் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரிக்கு சென்று மாணவர்கள் படிக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. மாணவர்கள் கல்லுாரிக்கு தனியார் பஸ்சிலும், பெற்றோர்களின் மூலம் வாகனத்திலும் வரும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து வசதி இல்லாததால் இருசக்கர வாகனத்தில், இரண்டுக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையிலும், சில மாணவர்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவிலும் வருகின்றனர். கல்லுாரி நிர்வாகம் மற்றும் அரசு தலையிட்டு, பேராசிரியர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு நோயியல் பாடப்பிரிவு பயிலும் மாணவர்களுக்கு ஆய்வுக்கூட வசதியை கல்லுாரியிலேயே ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்களுக்கு இலவச அரசு பஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.