ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் கலந்தாய்வை நிறுத்த கோரிக்கை
புதுச்சேரி: அரசு பள்ளி ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் கலந்தாய்வை நிறுத்தி வைக்க, புதுச்சேரி கிராமப்புற மாணவர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சங்கத்தின் அறிக்கை; புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர். கல்வித்துறையோ, மாணவர்களை பற்றி கவலைப்படாமல், ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனால், ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், பாடங்களை நடத்தி விட்டு, இடையில் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு செல்வதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கபடுவர். கல்வித்துறை கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் கலந்தாய்வு நடத்தாமல் இடையில் நடத்த ஏற்பாடு செய்திருப்பது, மாணவர்களின் கல்வித்தரம், பள்ளி தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. எனவே ஆசிரியர் டிரான்ஸ்பர் கலந்தாய்வை கல்வித்துறை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.