புதுச்சேரி தேர்தல் களத்தில் 117 சுயேச்சைகள் போட்டி
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 117 பேர் சுயேச்சைகளாக களம் இறங்கியுள்ளனர். புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 23ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அரசியல் கட்சிகள் சார்பில் 177 பேரும், சுயேச்சைகளாக 117 பேர் களத்தில் உள்ளனர். ஊசுடு(தனி) மற்றும் உப்பளம் ஆகிய இரு தொகுதிகளில் சுயேச்சைகளே இல்லை. அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். அதில், ஊசுடு (தனி) 5 பேரும், உப்பளத்தில் 6 பேரும் களத்தில் உள்ளனர். அதேபோல், காலாப்பட்டு, ராஜ்பவன் தொகுதிகளில் தலா ஒரு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகள் ஆதிக்கம்: தலா 14 வேட்பாளர்கள் போட்டியிலும் ஏனாம் தொகுதியில் 9 பேரும், நெல்லித்தோப்பு மற்றும் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதிகளில் தலா 8 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.