கணக்கெடுப்பு படிவம் வழங்குவதில் குளறுபடி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 2 பேர் அதிரடி மாற்றம்
புதுச்சேரி: அரசியல் கட்சியினருடன் கணக்கெடுப்பு படிவம் வழங்கிய ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இருவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து லாஸ்பேட்டை தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணைய உத்தரவின்படி, புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக கடந்த 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் லாஸ்பேட்டையில் இரு ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், சில அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் உடன் இருந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்விரு பகுதிகளிலும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இருவரையும் மாற்றிவிட்டு வேறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கணக்கெடுப்பு படிவங்களை வழங்க செல்லும் பகுதியை, அரசியல் கட்சிகளை சேர்ந்த ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு முன்னதாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் போதும், அதை திரும்ப பெறும் போதும் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் உடன் வர அனுமதிக்கலாம். முகவர்கள் தவிர்த்த அரசியல் கட்சியினரை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, கணக்கெடுப்பு படிவங்களை வழங்குவதை உறுதி செய்திட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அனைத்து வித நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.