சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால், 20க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை, முடக்கு மாரியம்மன் கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆக., 5ம் தேதி 20க்கும் மேற்பட்டோர் திடீரென வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதே உடல்நிலை பாதிப்பிற்கு காரணம் என, தெரிய வந்ததால், சுத்தமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் உருளையன்பேட்டை முடக்கு மாரியம்மன் கோவில் வீதி, அந்தோணியார் கோவில் வீதிகளில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால், 20க்கும் மேற்பட்டோர் திடீரென வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதில், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில வர்த்தக அணி குரு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.