உலக சுற்றுலா பயண பட்டியலில் புதுச்சேரிக்கு... 2ம் இடம்; சர்வதேச அளவில் நாடுகளின் கவனத்தை ஈர்த்தது
புதுச்சேரி : உலக சுற்றுலாப் பயண பட்டியலில் புதுச்சேரி இரண்டாம் இடம் பிடித்து, சர்வதேச அளவில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பாரம்பரிய கட்டடங்கள், அழகிய கடற்கரை, படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் தொடங்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தர, விடுதிகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிக தேடப்படும் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது.இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த லோன்லி பிளானட் என்ற பயண ஊடக நிறுவனம், 2025ம் ஆண்டிற்கான சிறந்த பயண இடங்களை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. லோன்லி பிளானட்டின் பயண வழிகாட்டியில் 30 பிரபலமான இடங்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களை குறிப்பிட்டுள்ளது. அதன்படி சிறந்த நகரங்கள் பட்டியலில், பிரான்ஸ் நாட்டின் துலுாஸின் கால்வாய் கரைகள் முதல் இடத்தை பிடித்துள்ளது.அடுத்தபடியாக இந்தியாவில் புதுச்சேரி கடற்கரை 2ம் இடத்தை பிடித்துள்ளது. பல்கேரியாவின் பான்ஸ்கோ 3ம் இடம் பிடித்துள்ளது.சிறந்த நாடுகளின் பட்டியலில், அழகிய கடற்கரைகள், உற்சாகமான இரவு வாழ்க்கை மற்றும் அமைதியான தேசிய பூங்காக்களுக்காக கேமரூன் முதல் இடம் பிடித்து உள்ளது. வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளுக்காக லிதுவேனியா மற்றும் பிஜி, முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன.சிறந்த பிராந்தியங்களுக்கு, அமெரிக்காவின் தென் கரோலினாவின் லோகன்ட்ரி மற்றும் கடலோர ஜார்ஜியா முதலிடத்தை பிடித்துள்ளது. புத்தர் பிறந்த இடமான நேபாளத்தின் தெராய் பகுதி 2வது இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 3வது இடம் பிடித்துள்ளது.சர்தேச அளவில் புதுச்சேரி இடம் பிடித்துள்ளது குறித்து சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில், 'இந்தியாவில் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக புதுச்சேரி உள்ளது என்று கடந்தாண்டு தரவுகள் தெரிவித்தன. மேலும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாத விடுமுறை காலத்தில் புதுச்சேரி ஓட்டலில் புக்கிங் 400 சதவீதம் உயர்ந்தது என்று மற்றொரு தரவுகளும் தெரிவித்தது. இப்போது உலக சுற்றுலா பயண பட்டியலில் புதுச்சேரி இரண்டாம் இடம் பிடித்துள்ளது மாநிலத்திற்கு பெருமை. இது புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கு சிறந்த எடுக்காட்டு. புதுச்சேரி சுற்றுலா பயணிகளின் விரும்பமான இடம் என்பதும், இதன் மூலம் புதுச்சேரியில் பொருளாதாரம் தொடர்ந்து உயர்ந்து வருவதும் உறுதியாகி உள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரியின் வெற்றிகரமான சுற்றுலா திட்டங்களால் உலக அளவில் தனித்துவமான இடத்தினை பெற்றுள்ளது' என்றார்.