ஐ.டி.ஐ., மாணவரை தாக்கிய 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது
புதுச்சேரி: ஐ.டி.ஐ., மாணவரை தாக்கிய 2 சிறார்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வம்பாகீரப்பாளையத்தை, சேர்ந்த ஐ.டி.ஐ., படிக்கும் 16 வயது மாணவர். இவர் கடந்த 17ம் தேதி மாலை வண்ணாகுளத்தில் நடந்த திருவிழாவிற்கு சென்றார். அங்கு தனது பள்ளி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வேல்ராம்பட்டை சேர்ந்த சூர்யா, 18; பிரசாந்த், 18; மற்றும் சிலருடன் பிரச்னை ஏற்பட்டது. பின் 16 வயது மாணவர் தனியாக வீட்டிற்கு சென்றபோது, எதிர்தரப்பினர், அவரை வேல்ராம்பட்டில் உள்ள மாட்டுக் கொட்டகைக்கு கடத்தி சென்று, திட்டி, கட்டையால் தாக்கினர். கத்தி காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவரை இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் முன் பைக்கில் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றனர். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து மாணவரை தாக்கிய சூர்யா, பிரசாந்த் மற்றும் 2 சிறார்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.