தெறிக்கவிட்ட காளைகளும், வெறியுடன் பாய்ந்த காளையரும் பாலமேடு ஜல்லிக்கட்டில் வீரர்கள் 20 பேர் உட்பட 51 பேர் காயம்
மதுரை : பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள், அடக்க முயன்ற வீரர்களை பந்தாடியதை வெளிநாட்டு பயணிகள் உட்பட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. காலை 7:40க்கு அமைச்சர் மூர்த்தி போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.போட்டிகளில் பங்கேற்க ஆன்லைனில் 4,820 காளைகள், 1,914 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் போட்டி நடந்தது. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடியவர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.கட்டவிழ்த்து விடப்பட்டதும் வாடிவாசல் வழியாக காளைகள் துள்ளிப் பாய்ந்து வந்தன. வீரர்கள் காளைகளின் திமிலைப் பிடித்து தொங்கியபடி காளைகளை அடக்கி பாராட்டு பெற்றனர். இதில் 20 வீரர்கள் உட்பட 51 பேர் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்க நாணயம், சைக்கிள் முதல் அண்டா, பட்டுப் புடவை, டிவி, மிக்சி வரை ஏராளமான பரிசுகளுடன், தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.மாட்டின் உரிமையாளர் ஒருவர் தன் மாடு களமிறங்கிய போது அதன் மீது விபூதி வீசியதால் கலெக்டர் சங்கீதா உத்தரவின் பேரில் அவரை போலீசார் பிடித்துச் சென்றனர்.ஜல்லிக்கட்டு போட்டியின் 7வது சுற்றில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான வீரர்களின் பனியன்களை சிலர் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 327, 307 பனியன் கொண்ட நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.ஜல்லிக்கட்டில் மொத்தம் 10 சுற்றுகளில் 930 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 14 காளைகளை அடக்கிய நத்தம் பார்த்திபன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வென்றார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.மஞ்சம்பட்டி துளசிராம் 12 காளைகளை அடக்கி 2ம் இடம் பெற்றார். அவருக்கு மோட்டார் பைக் பரிசு வழங்கப்பட்டது. பொதும்பு பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3ம் இடம் பெற்றார். அவருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசு வழங்கப்பட்டது.சிறந்த காளையாக சத்திரப்பட்டியை சேர்ந்த விஜய தங்கப்பாண்டியின் காளை தேர்வு செய்யப்பட்டது. முதல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.