ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 57 பணிகள் நிறைவு தலைமை செயல் அதிகாரி ஜெயந்த்குமார் ரே தகவல்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் 82 திட்டங்கள் அனுமதி பெறப்பட்டு, அதில் 57 பணிகள் நிறைவடைந்துள்ளதாக தலைமை செயல் அலுவலர் ஜெயந்த்குமார் ரே தெரிவித்தார்.புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி குறித்து ரெசிடன்சி டவர் ஓட்டலில் நேற்று கலந்துரையாடல் நடந்தது. பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஸ்மார்ட்சிட்டி தலைமை செயல் அதிகாரி ஜெயந்த்குமார் ரே கூறியதாவது:புதுச்சேரி நகர பகுதியில் 1,056 கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால், 620 கோடியாக மாற்றப்பட்டது.ஸ்மார்ட் சிட்டியின் கீழ் 82 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இதுவரை 57 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 25 பணிகள் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும்.முக்கியமாக இதில்3 பணிகள் மட்டும் மார்ச்சுக்கு பிறகும் நீடிக்க வாய்ப்புள்ளது. குடிநீர், கழிவுநீர், குடியிருப்பு வசதிகள், பழங்கால கட்டடங்கள் புதுப்பிப்பு, போக்குவரத்து சார்ந்தவை அடங்கும். குறிப்பாக 30 கோடி ரூபாயில் கட்டப்படும் புது பஸ்டாண்ட் விரைவில் முடிக்கப்படும். அதன் திறப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.அண்ணா திடலில் மினி ஸ்டேடியம், பழைய துறைமுகத்தில் நகர்ப்புற பொழுதுபோக்கு மையம், பெரிய கால்வாய் மேம்பாடு, தாவரவியல் பூங்கா மேம்பாடு, மழைநீர் மற்றும் நகர பகுதியில் சாக்கடை கால்வாய்கள் மார்ச்சுக்குள் முடிக்கப்படும். துாய்மை பணியில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது.இவ்வாறு அவர் கூறினார்.