சைகை மொழிக்கான அடிப்படை விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான சைகை மொழி அடிப்படை விளக்க முகாம் நடந்தது. உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் செப்., மாதம் உலக சைகை மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி அரசின் காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டம் சார்பில், இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சைகை மொழிக்கான அடிப்படை விளக்க முகாம் நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி ஹமீம் முனிசா பேகம், குறை தீர்ப்பு அதிகாரி ரவி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாபன் முன்னிலை வகித்தனர்.இதில், டெப் எனாபில்ட் பவுண்டேஷன் மேலாளர் ஞானவேல், அமர்நாத், சொர்ணலட்சுமி, கவிதா, சத்திய புவனம் ஆகியோர் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு சைகை மொழிக்கான அடிப்படை விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை காதுகேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் மாநில நோடல் அதிகாரி ஸ்டாலின் சிவகுருநாதன் செய்திருந்தார்.