புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆதார் முக அங்கீகார வருகை பதிவேடு
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆதார் முக அங்கீகார ஊழியர் வருகை பதிவேடு நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்களில் பணிக்கு வராமலேயே வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு மட்டும் சம்பளம் வாங்குவது, பாதி நேரம் மட்டுமே இருப்பது.தனக்கு பதிலாக மற்றொரு நபரை பணி செய்ய வைப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை கண்டறிந்து தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களின் வருகை பதிவேடு அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கும் பணியில் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையம் ஈடுபட்டு வருகிறது.அதையொட்டி, அரசு அலுவலகங்களில் காகித வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் முறையை ஒழித்து ஆதார் உடன் இணைக்கப்பட்ட விரல் ரேகை வருகை பதிவேடு முறை அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.இதேபோன்று புதுச்சேரியில் உள்ள தலைமை செயலகம் தொடங்கி அரசு மருத்துவமனை வரை உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் விரல் ரேகை வருகை பதிவேடு கருவி பொருத்தப்பட்டு, சில இடங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இந்நிலையில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில், 136 டாக்டர்கள், 350 செவிலியர்கள்,465 தொழில்நுட்ப ஊழியர்கள், 300 வார்டு உதவியாளர்கள் உட்பட 1251 பேர் பணிபுரிகின்றனர்.இவர்களுக்காக மருத்துவமனை வளாகத்தில் 12 இடங்களில் ஆதாருடன் கூடிய விரல் ரேகை வருகை பதிவேடு அமைக்கப்பட்டுள்ளது.இதில், ஒரு படி நிலை மேலே சென்று ஊழியர்களின் வருகை பதிவேட்டை துல்லியமாக்க ஆதார் முக அங்கீகார வருகை பதிவேடு முறை கடந்த வாரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையில் கடந்த வாரம் 500 ஊழியர்களின் வருகை பதிவேடு மிகத் துல்லியமாக பதிவானது. இதே நடைமுறை புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விரைவில் வர உள்ளது.
எப்படி செயல்படும்
கூகுள் பிளே ஸ்டோரில் தேசிய தகவல் மைய ஆதார் முக அங்கீகார வருகை பதிவேடு செயலியை தங்களின் மொபைல் போனில் முதலில் பதிவிறக்கம் செய்து, அதில், தான் பணி புரியும் அரசு துறையின் வெப்சைட் போர்ட்டலில் ஆதார் எண்ணை குறிப்பிட்டு, தனது தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின், தனது அலுவலகத்திற்கு வரும் போது அந்த அலுவலக வளாகத்தில் தனது மொபைல் போனில் உள்ள செயலியில் தனது முகத்தை ஸ்கேன் செய்தால் அது முகம் மற்றும் கண்ணை ஸ்கேன் செய்து பதிவேட்டை பதிவு செய்யும். இதேபோல் அலுவலகம் விட்டு செல்லும்போது பதிவு செய்ய வேண்டும். இதற்காக அலுவலகத்தில் டிவைஸ் ஒன்று பொருத்த வேண்டும்.