கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை தேவை
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியிலிருந்து ஏம்பலம், நெட்டப்பாக்கம் வழியாக மடுகரை, கரையாம்புத்துார் பகுதிக்கும், மதகடிப்பட்டு வழியாக கரையாம்புத்துார் பகுதிக்கும் 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்கி வந்தன. இந்த பஸ்கள் மூலம் மடுகரை, நெட்டப்பாக்கம், கரையாம்புத்துார், பனையடிக்குப்பம், சொரப்பூர், பண்டசோழநல்லு ார் உள்ளிட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த வழித்தடங்களில் பர்மிட் பெற்று இயங்கி வந்த 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் தற்போது இயக்கப்படவில்லை. இதனால் தற்போது இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கை பஸ்களில் பொதுமக்கள், மாணவர்கள் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், காலை மட்டும் மாலை நேரங்களில் பஸ்சின் கூரை மேல் பயணம் செய்யும் நிலை உள்ளது. பஸ்சில் கூட்ட நெரிசல் உள்ளதால் பெண்கள், மாணவிகள் கடுமையாக பாதிக்கபடுகின்றனர். ஆகையால், புதுச்சேரியிலிருந்து மதகடிப்பட்டு, நெட்டப்பாக்கம் வழியாக மடுகரை, கரையாம்புத்துார் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.