திமிங்கல எச்சம் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி : போலீஸ் துறையில் புறையோடியுள்ள அரசியல் தலையீடுகளை கலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார். அவர், கூறியதாவது; போலீஸ் துறை, மக்களின் நம்பிக்கையை இழந்து வருவது சரியல்ல. அதனை உணர்ந்து போலீஸ் துறையில் புறையோடியுள்ள அரசியல் தலையீடுகளை களைய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக் க வேண்டும். இல்லையெனில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை காப்பாற்ற முடியாது. போக்குவரத்து எஸ்.பி., மற்றும் 2 இன்ஸ்பெக் டர்கள் கடந்த காலங்களில் ஒரு குற்றத்தை மூடி மறைத்த குற்றச்சாட்டை, ஒரு கும்பல், தங்கள் சுயநலத்திற்காக கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து, அதிகாரிகளிடம் கோடி கணக்கில் பணம் கேட்டு பேரம் பேசியுள்ளனர். பேசிய பணம் கிடைக்காததால் ஸ்டேஷ னுக்கே சென்று இன்ஸ்பெக்ட ரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது போலீஸ் துறையின் பலகீனத்தையே காட்டுகிறது. மிரட்டல் ஆசாமிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்திருப்பது சரியான நடவடிக்கை. இதேபோல், வியாபாரிகள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஒப்பந்ததார்களை சில அரசியல்வாதிகள், சில போலீஸ் அதிகாரிகள், சமூக சேவகர்கள் பெயரில் மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, கட்டப் பஞ்சாயத்து நடத்தி சதவீத அடிப்படையில் தீர்ப்பு கூறப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷன்கள் கோர்ட் போன்று செயல்படுகின்றன. இரு தினங்களுக்கு முன் தமிழக போலீசார், திருபுவனையை சேர்ந்த ஒருவர் ரூ.15 கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சம் வைத்துள்ளதாக கைது செய்து திருபுவனை போலீசில் ஒப்படைத்துள்ளனர். இவ்வழக்கில் சமூகத்தில் சாதாரண நிலையில் உள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சம் கிடைத்ததன் பின்னணியில் முக்கிய நபர்கள் இருப்பார்கள். எனவே இவ்வழக்கை சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவிட வேண்டும். திமிங்கலம் எச்சம், சந்தன ஆயில் தொழிற்சாலை, போலி மதுபான ஆலை உள்ளிட்ட புதுச்சேரியில் நடைபெறும் பல பூதாகரமான பிரச்னைகள் தமிழக போலீசாரால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.