தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் அம்னஸ்டி திட்டம் துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் அம்னஸ்டி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டல இயக்குநர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் 196வது கூட்டத்தில் பங்குதாரர்களுடன் நல்லுறவை வளர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கவும், 'அம்னஸ்டி திட்டம்-2025' செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, அம்னஸ்டி திட்டம் தொழிலாளர் காப்பீட்டு சட்டப்பிரிவுகள் 75, 82, 84, 85 கீழ் தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 226வது பிரிவின் நீதிமன்ற வழக்குகளை திரும்ப பெறும் வாய்ப்பை வழங்குகிறது. அந்த வழக்குகள் கடந்த மார்ச் 31ம் தேதி அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திரும்பப் பெறப்படும். இந்த அம்னஸ்டி திட்டம் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான தகுதியான வழக்குகளை ஒரு முறை தீர்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. புதிய அம்னஸ்டி திட்டம் வரும் அக்டோ பர் 1ம் தேதி முதல் 2026ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். முந்தைய அம்னஸ்டி திட்டங்களின் நன்மைகளை பெற்ற தொழிலாளர்கள், நிறுவனங்கள் இந்த புதிய அம்னஸ்டி திட்டத்தின் பயன்களை பெற தகுதியுடையவர்கள். மேலும், தகவல் மற்றும் வழிகாட்டுதலுக்கு புதுச்சேரி, இ.எஸ்.ஐ.சி., மண்டல அலுவலகம், 0413-2357642 அல்லது rd-esic.gov.inஎன்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.